ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஆன்மா உங்களை வாழ்த்தட்டும்

ஈமான் கொண்டவர்களே
ஈந்து வாழுங்கள் இல்லை என்று சொல்லாதீர்கள் .
தர்மம் செய்யுங்கள் செல்வம் குறையாது .
இரைக்க இரைக்கத்தான் நீர் ஊறும் – தர்மம்
கொடுக்க கொடுக்கத்தான் செல்வம் சேரும் .


ஏழைகள் கேட்டால் முகம் சுளிக்கும் செல்வந்தர்களே
சிந்தியுங்கள் . நீங்கள் இங்கு இல்லாத காலமும் உண்டு
நீங்கள் செல்வத்தோடு இருக்கும் காலந்தான் இன்று
இது எவரால் வந்தது ? யார் காரணம்.

நீங்களே இல்லாமலே போய்விடும் காலமும் நாளை உண்டு
அப்போது நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தின் நிலை என்ன ?
உங்களோடு சேர்ந்து வராத செல்வத்தை ஏன்
உங்களோடு சேர்த்து வைக்கிறீர்கள் , தேக்கி வைக்கிறீர்கள்.

ஏழைகள் எளியவர்கள் வறியவர்கள் தங்களின்
தேவைகளின் நெருக்கடியால் உங்களிடம் உதவி
யாசகம் கேட்க வெட்கப்படுகிறார்கள் .
தங்களின் ஏழ்மையின் நெருப்பை இதயத்திலே
தேக்கி அடக்கி ஜீரணித்து கொண்டு இருக்கிறார்கள் .

அவர்களின் ஏழ்மையின் நெருப்பு உங்களையே
குறி பார்த்துக்கொண்டு இருக்கிறது .
அது உங்களை சுடும் முன்பே – அதில்
தர்மம் உதவி என்ற நீரை ஊற்றி அணையுங்கள்

அவர்களின் வாழுகின்ற நிலை பார்த்து உதவி செய்யுங்கள்
அவர்களின் வாடிய முகம் பார்த்து கை மறைத்து கொடுங்கள்
அவர்கள் கேட்காமலேயே செய்யும் உதவிகள் மேலானது
நீங்கள் செய்யும் இந்த தர்மந்தான் நாளை
மறுமையில் உங்களுக்காக நற்ச்சாட்சியாக செல்லும்

பூச்செடிகளுக்கே மாலை போடுபவர்களே
வாடிய செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுங்கள் .
அது உங்கள் கண்களுக்கு மாலை போடும் .
அது உங்கள் கழுத்துக்கு மாலையிடும் .

வயிறு நிறைந்தவர்களுக்கே விருந்து வைத்து
வாழ்த்து சொல்லி மகிழ்பவர்களே – ஏழை
பசித்து வயிறுக்கு கஞ்சி ஊற்றுங்கள் .
அந்த வயிறு உங்களை வாழ்த்தும்

பொங்கி வரும் பாலை பங்கிட்டு கொடுங்களேன்
தங்கியிருக்கும் பாலையா கேட்கிறோம் . நீங்கள்
தரவில்லைஎன்றால்
அது போவது நெருப்புக்குத்தானே .

நெருப்பை வளர்த்து நிறம் ரசிக்காதீர்கள் .
அது உங்களை ஒரு நாள் பற்றிக்கொள்ளும் .
பணத்தை சேர்த்து பதுக்கி வைக்காதீர்கள் .
நாளை மறுமையில் உங்களை சுட்டு பொசுக்கும் .

செல்வந்தர்களே
சேரில் தத்தளிக்கும் மீன்களுக்கு தண்ணீர் விடுங்கள் .
அவைகள் நீந்தி செல்லட்டும்.
கடனில் தவிக்கும் பந்துக்களின் கடனை தீருங்கள்
அவர்கள் நிம்மதி பெறட்டும் – இல்

வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்களுக்கு மணம் முடித்து வையுங்கள்
அவர்கள் உங்களை வாழ்த்தி மகிழட்டும்.
வாழ துடிக்கும் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுங்கள்
தீவிரவாதம் ஒழியட்டும் .

தீன்கல்வி நிலை வளர வாரி வழங்குங்கள்
இறை நம்பிக்கை பரவட்டும்
சமூகக்கல்வி நிலை உயர வாரி வழங்குங்கள்
மக்களின் வாழ்க்கை தரம் உயரட்டும்
அனாதைகளுக்கு உதவுங்கள் அவர்கள் ஆன்மா
உங்களை வாழ்த்தட்டும் .

செல்வம் நிறைந்துள்ள ஏரியைப் போன்றது
அதில் தர்மம் என்ற வாய்க்காலை ஒரு பக்கம்
எப்போதும் ஓடவிடுங்கள்
ஏறியும் உடையாது , தண்ணீர் வரவும் நிற்காது

செல்வம் என்ற தேனை சுவையுங்கள்
தேனை சுரக்க வைத்தவனையும் – அதை
சேகரித்து தந்தவனையும் மறக்காதீர்கள்
திரும்பிப்பாருங்கள் நீங்கள் நன்றியுள்ளவர்களாகிவிடுவீர்கள் .

ஈமான் கொண்டவர்களே
ஏழையை சுட்டு பொசுக்கும் நெருப்பாய் இருந்து விடாதீர்கள்
ஏழைக்கு சுடர் தரும் சூரியனாய்  உயர்ந்து நில்லுங்கள் ,
மின்னி வரும் மின் மினி பூச்சியாய் மறைந்து விடாதீர்கள்
ஏழைக்கு வெளிச்சம் தரும் வெண்ணிலவாய் வாழ்ந்து காட்டுங்கள்

நீர் தேங்கி கிடக்கும் குட்டையாய் செல்வத்தை வைக்காதீர்கள் .
நீந்தி செல்லும் ஜீவ நதியாய் செலவழியுங்கள் .
கடலில் விழுந்த மழைத்துளியாய் ஆகிவிடாதீர்கள்
ஏழை கழனியில் பெய்த மழை நீராய் வாழ்ந்து விடுங்கள் .

ஈமான் கொண்டவர்களே
நீங்கள் இருக்கின்ற போதே ஈந்து வாழுங்கள்
நீங்கள் இருக்கின்ற போதே அதுதான் உங்கள் கூட வரும்
இறைவனுக்கு அஞ்சுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக