ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

எங்கே நிம்மதி ?



விடியலுக்கு முன்னே இறைவனை தொழுது விடு
இதயம் பெரும்  நிம்மதி
உதயம் உன்னை தொடும் வரை திக்ரில் ஈடுபடு
உன் கடமைகளில் உணர்வாய் நிம்மதி
உறவுகளின் தேவைகளை பொறுப்பாய் நிறைவேற்று
உன் இல்லத்தில் உணர்வாய் நிம்மதி
நன்மைகள் தரும் வார்த்தைகள் பேசு
உன் நாவால் பெறுவாய்  நிம்மதி
தீமைகளை கண்டால் விலகிக் கொள்
உன்னிலே உணர்வாய் நிம்மதி
ஹலாலான வருமானத்தில் உணவை தேடு
பிரார்த்தனையில் பெறுவாய் நிம்மதி
தேடும் பொருளில் ஒரு பங்கை தர்மமிடு
உன் சொத்தில் வரும் நிம்மதி
சுவையான உணவையும் அளவாய் உட்கொள்
உன் வயிற்றுக்குள் என்றும் நிம்மதி
கிடைக்கும் சுகங்களுக்கு இறைவனுக்கு நன்றி சொல்
தொடரும் உன்னில் நிம்மதி
இல்லத்தில் நுழையும் முன் ஸலாம் சொல்
இல்லத்தோரால் கிடைக்கும் நிம்மதி
பெண்களிடம் பேச்சுக்களை குறைத்து கொள்
பெண்களால் கெடாது நிம்மதி
பெற்றோர் பொருத்தங்களை கேட்டுசெய்
சுபகாரியங்களில் கிடைக்கும் நிம்மதி
பணியாளர்களின் தேவைகளை முறையாய் நிறைவேற்று
தொழில்களில்  கிடைக்கும் நிம்மதி
வீண் விரயங்களை தவிர்த்து விடு
விருந்துகளில் கிடைக்கும் நிம்மதி
இன்முகம்  காட்டி இருப்பதை கொடு
விருந்தாளிகள் பெறுவார் நிம்மதி
உறவுகளை முறித்து காரியம் செய்யாதே
இறைவன் தரமாட்டான் நிம்மதி
வரவுக்குள் செலவை வைத்துக்கொள்
வருமானத்தில் உண்டு நிம்மதி
வட்டிக்கு வாங்கி செலவு செய்தால்
என்றும் கிடைக்கது நிம்மதி
வட்டியின் வரவில் வாழ்க்கை நடத்தினால்
மறுமையில் பறிபோய்விடும் நிம்மதி
கண்டித்து வளர்க்காத பிள்ளைகளிடம்
வாழ்க்கையில் கிடைக்காது நிம்மதி
வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வோர்
வாழ்க்கையில் உணர்வார் நிம்மதி
மகரை கொடுத்து மணம் முடிப்போர்
மணவறையில் சந்திப்பார் நிம்மதி
ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவுங்கள்
அவர்கள் வாழ்க்கை தரும் நமக்கு நிம்மதி
மறுமணம் விரும்பும் விதவை பெண்களை  திருமணம் செய்யுங்கள்
அவர்கள் கற்பின் நிலை பெரும் நிம்மதி
சுத்தம் சுகாதாரம் உள்ள வீட்டில்
தொடரும் என்றும் நிம்மதி
அண்டை வீட்டாரை சொந்தமாக நினைப்பவர்களுக்கு
அவர்களால் கெடாது நிம்மதி
அளவோடு நண்பனை சந்தித்து உறவாடு
மாறாது என்றும் நிம்மதி
திக்ரில் சபைகளில் அமர்ந்து செல்
உன்னோடு தொடரும் நிம்மதி
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வோர்
அடைந்து கொள்வார் மறுமையில் உயர் நிம்மதி
அனாதை குழந்தைகளிடம் அன்பு கட்டுவோரை
அரவணைத்து கொள்ளும் நிம்மதி
இழப்புகள் நேரத்தில் விதியை நம்பு
இறைவன் தருவான் நிம்மதி
உன்னிலும் கீழோர் உலகினில் பலர்
உன் வாழ்க்கையே உனக்கு நிம்மதி
மரணத்தை தினமும் நினைவு கூறு
இன்றைய வாழ்க்கையே உனக்கு நிம்மதி
நோயாளியை கண்டு நலம் விசாரிப்போருக்கு
இறைவன் தருவான் அழகிய நிம்மதி
சிறைப்பட்டோரின் விடுதலைக்கு உதவி செய்யுங்கள்
அவர் குடும்பமே பெரும் நிம்மதி
மனைவியின் அணைப்பிலும் மழலை சிரிப்பிலும்
மனதில் வருமே நிம்மதி
மதுவின் பழக்கத்திலும் தீய மாதுவின் தொடர்பிலும்
நிலைக்காது என்றும் நிம்மதி
சேர்த்து வைத்து காக்கும் பணத்தில்
இல்லை நிம்மதி
அதை நேர் வழியில் செலவு செய்தால் மட்டுமே
கிடைக்கும் நிம்மதி
பசியால் தவிக்கும் ஏழைக்கு உண்ண கொடுங்கள்
அதைப் பார்த்தாலே வரும் நிம்மதி
கல்வி கற்றுக் கொடுப்பதால் மட்டும்
இல்லை நிம்மதி
கற்றபடி நடப்பதால் மட்டுமே
கிடைக்கும் நிம்மதி
கல்வியின் உயர்வுக்கு உதவுங்கள்
காலமும் வந்து கொண்டிருக்கும் நிம்மதி
வாங்கிய கடனை கொடுக்கும் வரை
மறுமையில் கிடைக்காது நிம்மதி
கஷ்டப்படுவோரின் கடனை விட்டுக் கொடுப்பதால்
மறுமையில் பெற்றுக்கொள்வார் வெகுமதி நிம்மதி
குறைந்த வருமானம் பசி தீர்க்கும் உணவு
ஆழ்ந்த உறக்கம் ஏழைக்கு நிம்மதி
நிறைத்த வருமானம் நம்பிக்கையான பணியாளர்களை நிலையான
செல்வந்தர்க்கும் கிடைக்கும் நிம்மதி
நன்மையை தொடங்குமுன் ஷைத்தானை விரட்டு
உன் செயலில் தெரியும் நிம்மதி
பிஸ்மில்லாஹ்வை கொண்டு ஆரம்பம் செய்
முடிவில் கிடைக்கும் நிம்மதி
ஐவேளை தொழுகையை அவசியம் நிறைவேற்று
உன்னில் ஐக்கியமாகி விடும் நிம்மதி
அல்லாஹ்வின் வேதம் திருக்குரானை தினமும் ஓதிப்பார்
ஆண்டவன் தருவான் அழகிய நிம்மதி
அண்ணல் நபி[ஸல்] அவர்கள் மீது சலவாத் ஓதிக்கொண்டே இரு  -  உனக்கு வந்து கொண்டே இருக்கும் நிம்மதி
இளமையில் ஆன்மீகம்  முதுமையில் நிம்மதி
மலரும் நினைவுகள் தனிமையில் நிம்மதி
மானிட வாழ்க்கையில் தொழுகையே நிம்மதி
நானிலத்து உயர் மேதை, நற்சீலர்களின் பெருந்தலைவர் ,
நற்குணத்தின் நாயகர் , நாளைய மறுமையின் பரிந்துரையாளர் ,
கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா
ஸல்லல்லஹு அலைஹி வ ஸல்லம்
அவர்கள் வாழ்க்கை முறையை பின்பற்றி நடப்பவர்களுக்கு இம்மை மறுமை ஈருலகிலும் கிடைக்கும்
நிம்மதி         நிம்மதி    நிம்மதி
இதை எழுத வைத்த இறைவனுக்கே எல்லா புகழும்
அல்ஹம்து லில்லாஹ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக